விலை வீழ்ச்சியால் 700 மூட்டை சின்னவெங்காயத்தை குட்டையில் கொட்டிய விவசாயி


விலை வீழ்ச்சியால் 700 மூட்டை சின்னவெங்காயத்தை குட்டையில் கொட்டிய விவசாயி
x

விலை வீழ்ச்சியால் 700 மூட்டை சின்னவெங்காயத்தை டிராக்டரில் கொண்டு வந்து விவசாயி குட்டையில் கொட்டினார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில், ஓசூர் அருகே சானமாவு கிராமத்தை சேர்ந்த விவசாயி அனில்குமார் 5 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். அறுவடை செய்யும் நேரத்தில், கனமழை பெய்ததால் வியாபாரிகள் வாங்கி செல்ல முன்வரவில்லை. இதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் 700 மூட்டை சின்ன வெங்காயத்தை நேற்று டிராக்டரில் ஏற்றிச்சென்று அவருடைய நிலத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் கொட்டி அழித்தார்.

விவசாயிகள் கவலை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொதுவாக 50 கிலோ சின்ன வெங்காயம் கொண்ட ஒரு மூட்டை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு மூட்டை ரூ.500 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது. ஆனால் இந்த வெங்காயத்தையும் வாங்கி செல்ல வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்று கூறினர்.


Next Story