வெங்கல் அருகே மாடு முட்டி விவசாயி பலி


வெங்கல் அருகே மாடு முட்டி விவசாயி பலி
x

வெங்கல் அருகே வளர்த்த மாடு முட்டி வீசியதில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருவள்ளூர்

வெங்கல் அடுத்த மொன்னவேடு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தாமஸ் (வயது 56). இவரது மனைவி வெண்ணிலா (50). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். தாமஸ் விவசாய கூலித்தொழில் செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமஸ் ஒரு காளை மட்டை வாங்கினார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி அவர் புதிதாக வாங்கிய காளை மாட்டை மேய்சலுக்காக வயல்வெளிக்கு கொண்டு சென்றார். அப்போது காளை மாடு பயிர்களை மேய வயலில் இறங்கியதாக கூறப்படுகிறது. உடனே தாமஸ் காளை மாட்டை விரட்டினார். புதிதாக வாங்கிய மாடு என்பதால் மிரண்டு தாமஸை கொம்பால் குத்தி எறிந்தது.

இதில் அவரது வயிற்றில் கொம்பு பலமாக குத்தியது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தாமஸ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தாமசின் மகன் கண்ணன் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்த்த மாடு முட்டி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story