மொபட் மீது கார் மோதி விவசாயி பலி


மொபட் மீது கார் மோதி விவசாயி பலி
x

மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தார்.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் உள்ள ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). விவசாயியான இவர் கூவத்தூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் நெய்வேலியில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த கார், கணேசனின் மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காரும் அதே புளியமரத்தில் மோதி நின்றது. அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம், நெய்வேலி குழிமுயல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் சசிக்குமார்(33) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story