ஆடுகள் திருடு போன தகராறில் விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

ஆடுகள் திருடு போன தகராறில், விவசாயியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வாலிபரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் காரமடை அருகே மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 58). விவசாயி. இவர் மாந்தரைக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆட்டுபட்டி அமைத்து, ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சின்னசாமி தனது ஆடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் மாலையில் ஆட்டுபட்டிக்கு சென்று பார்த்த போது, ஆடுகள் அங்கு வரவில்லை. எங்கு தேடியும் ஆடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த சின்னசாமி, அதே பகுதியில் உறவினரான அய்யாசாமியின் வீட்டிற்கு சென்றார்.
தகராறு
அங்கு சின்னசாமி, அய்யாசாமி, குருந்தாசலம் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சின்னசாமி ஆடுகள் காணாமல் போனது குறித்து உறவினர்களிடம் கவலையுடன் பேசினார். அப்போது அவர்கள் மேடூர் செல்வா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (28) என்பவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறினர்.
அந்த சமயம் அங்கு ரஞ்சித்குமார் (28) வந்து உள்ளார். உடனே சின்னசாமி ரஞ்சித்குமாரிடம் நீ தானே என் ஆடுகளை திருடினாய்?, ஒழுங்காக எனது ஆடுகளை திருப்பி கொடுத்து விடு என கூறினார்.
இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றியதால், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ரஞ்சித்குமாரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பின்னர் சின்னசாமி, அய்யாசாமி வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். இருப்பினும் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், இரவு 11 மணிக்கு தனது வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அய்யாசாமி வீட்டிற்கு பின்புறம் வந்தார். அப்போது அங்கு பேசி கொண்டிருந்த சின்னசாமியை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
உடலில் குண்டுகள் பாய்ந்ததால் சின்னசாமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் கைது
இதற்கிடையே பொதுமக்கள் ரஞ்சித்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சின்னசாமியின் ஆடுகள் வனப்பகுதியில் மேய்ந்து விட்டு இரவு தாமதமாக ஆட்டுபட்டிக்கு திரும்பி வந்தன. இதை அறியாமல் அவர் ஆடுகள் காணாமல் போனதாகவும், ரஞ்சித்குமார் திருடி சென்றதாகவும் கூறியது தெரியவந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் ரஞ்சித்குமார் துப்பாக்கியால் சுட்டதில், 11 குண்டுகள் பாய்ந்து சின்னசாமி இறந்து உள்ளார். தொடர்ந்து ரஞ்சித்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.