உழவர் சந்தை அமைக்க வேண்டும்


உழவர் சந்தை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 July 2023 4:51 PM GMT (Updated: 7 July 2023 10:21 AM GMT)

சேத்துப்பட்டில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. செய்யாறு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா, சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க உதவி இயக்குனர் நாராயணன், பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்கம் உதவி இயக்குனர் கோவிந்தராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

உழவர் சந்தை

இயற்கை விவசாயம் குறித்து கிராம பகுதிகளில் செயல் விளக்கம் அளிக்க வேண்டும், சேத்துப்பட்டு நகரில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதனை 6 மாதத்தில் இருந்து ஒரு வருடமாக உயர்த்த வேண்டும்

கங்காபுரத்தில் செயல்பட்டு வந்த நேரடி கொள்முதல் நிலையம் செம்மாம்பாடி கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் கங்காபுரத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

பின்னர் செய்யாறு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் சேத்துப்பட்டு உதவி மின் பொறியாளர் கோவிந்தராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story