பெண்களை ஆபாச படம் எடுத்ததாக கைதான சினிமா இயக்குனர், இளம்பெண்ணுடன் பேசும் சர்ச்சை ஆடியோவால் பரபரப்பு


பெண்களை ஆபாச படம் எடுத்ததாக கைதான சினிமா இயக்குனர், இளம்பெண்ணுடன் பேசும் சர்ச்சை ஆடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Sep 2022 10:12 PM GMT (Updated: 6 Sep 2022 12:48 AM GMT)

சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக கைதான சினிமா இயக்குனர் இளம்பெண்ணுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38). சினிமா பட இயக்குனரான இவர், இளம்பெண்களை நடிகை ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை ஆபாச படங்கள் எடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இரும்பாலையை சேர்ந்த கனகா என்ற பெண் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் வேல்சத்ரியன் மீது புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இயக்குனர் வேல்சத்ரியன், அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், மடிக்கணினி, கேமராக்கள், பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

300 பெண்கள்

நடிகையாக ஆக வேண்டும் என்ற மோகம் கொண்ட இளம்பெண்களை இயக்குனர் வேல் சத்ரியன் தேடிய போது, அவரது வலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கி உள்ளனர். பின்னர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி அவர்களை இயக்குனர் ஏமாற்றி ஆபாச படம் எடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இவரை நாடிவந்த இளம்பெண்கள் ஏமாந்து உள்ளனர். அந்த ஆபாச படங்களை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வேல்சத்ரியனிடம் இருந்து பறிமுதல் செய்த ஹார்டு டிஸ்குகளை ஆய்வு செய்ய போலீசார் அதனை சென்னைக்கு அனுப்பி உள்ளனர். அதை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மற்றொரு ஆடியோ

ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரிடம் இயக்குனர் வேல்சத்ரியன் பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதற்கிடையே, தற்போது மற்றொரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, அந்த ஆடியோவில், இயக்குனர் வேல்சத்ரியன், ஒரு இளம்பெண்ணுடன் பேசுகிறார். அதில், அந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுக்க கற்பழிப்பு காட்சியில் நடிக்க சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவது போல் உரையாடல் இருக்கிறது.

அந்த ஆடியோவில் பதிவான விவரம் வருமாறு:-

இயக்குனர்:- உங்கள் டாடி என்ன சொன்னாரு. நீ போனதுக்கு அப்புறம் போன் பண்ணி என்ன ஏதுன்னு என்னிடம் நொய், நொய்னு கேட்டாரு.

இளம்பெண்:- போயிட்டு பத்திரமா வான்னு சொன்னாரு.

இயக்குனர்:- நீ ரெடியாயிட்டியா?

இளம்பெண்:- ஆமாம்.

இயக்குனர்:- என்ன சீன் கொடுத்தாலும் நடிப்பியா? ரொமான்ஸ், கிஸ், லிப் டூ லிப்பு.. அதெப்படி கரெக்டா பண்ணுவ, ரேப் சீன்ல நடிப்பியா..!

இளம்பெண்:- ரேப் சீனில் நடிக்க மாட்டேன்.

இயக்குனர்:- எல்லாத்துக்கும் ம்ம்னு சொன்ன, இது மட்டும் வேணாமா? நான் பண்ணட்டுமா...?

இளம்பெண்:- ம்ம்.. சரி.

இவ்வாறாக அவர்களது உரையாடல் நிறைவு பெறுகிறது.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ஆடியோவில் உள்ள பெண்ணிடம் பேசி மயக்கியது போல பல பெண்களையும் அவர் ஆபாச படம் எடுத்து சீரழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சிறையில் உள்ள இயக்குனர் வேல்சத்ரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் சேலத்தில் இயக்குனர் வேல்சத்ரியன் வாடகைக்கு வீடு எடுக்கும்போது உதவியாளர் ஜெயஜோதியை மனைவி என்று கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் இருவரும் திட்டமிட்டு சினிமா ஆசை கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படங்களை எடுத்து வைத்துள்ளனர்.

சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் சினிமா கம்பெனியை வேல்சத்ரியன் நடத்தி வந்ததும், அங்கு பிரபல நடிகர்களுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை பார்வைக்காக அறையில் ஒட்டி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் ஆபாச படம் எடுக்க கேமராவுடன் தனி அறையும் உள்ளது.

ரூ.30 ஆயிரம் வசூல்

இது ஒருபுறம் இருக்க, இயக்குனர் வேல்சத்ரியனிடம் 150 ஆண்கள், 250 இளம்பெண்கள் என சுமார் 400 பேர் சினிமாவில் நடிக்க பயோடேட்டா கொடுத்துள்ளதாகவும், அவர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் வரை அவர் வசூலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பயோடேட்டா கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஆபாச வீடியோக்கள் இணையதளங்களுக்கு விற்பனை?

சேலத்தில் கைதான இயக்குனர் வேல்சத்ரியன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இயக்குனரிடம் எத்தனை பெண்கள் ஏமாந்துள்ளனர். கற்பழிப்பு காட்சியில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இளம் பெண்களை அவரது ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளாரா? இந்த ஆபாச வீடியோக்கள் இணையதளங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்று தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசில் சிக்கிய மடிக்கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்குகளில் பெண்களின் ஆபாச படம் எத்தனை உள்ளது? சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி எத்தனை பெண்களை அவர் ஏமாற்றி உள்ளார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.


Next Story