தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்


தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x

தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருவாரூர்

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரங்களில் ஆஸ்பத்திரியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மருத்துவ கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டது. இந்த மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் இந்த கழிவுகள் தீயிட்டு கொளுத்துவதால் தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்படும் சம்பவமும் நடைபெற்று வந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் கடந்த 17-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக தண்டலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டது.

இந்த இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டாத வகையில் தடுப்பு வேலி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு குப்பைகள் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறி குப்பைகளை கொண்டு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1000 அபராதம் விதித்து, பிடிக்கப்படும் வாகனங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தண்டலை ஊராட்சி சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் திருவாரூர் பகுதியை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து 43 கோணிப்பைகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ கழிவுகளை கொட்டியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், இல்லையெனில் போலீஸ் துறை மூலம் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தண்டலை ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Next Story