முதல் மனைவியை அரிவாளால் வெட்டிய மீன் வியாபாரி


முதல் மனைவியை அரிவாளால் வெட்டிய மீன் வியாபாரி
x

முதல் மனைவியை மீன் வியாபாரி அரிவாளால் வெட்டினார்.

பெரம்பலூர்

அரிவாள் வெட்டு

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், கே.கே.நகர், 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். மீன் வியாபாரமும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு மேனகா (வயது 38) என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். பின்னர் விஜயகுமார் ஷர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயகுமார் நேற்று அதிகாலை மது போதையில் முதல் மனைவி மேனகா வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மேனகா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் அரிவாளால் மேனகாவை வெட்டியதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை

இதில் படுகாயமடைந்த மேனகா வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை கண்ட விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் மேனகாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேனகா கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story