சேலையூர் அருகே ஓசியில் உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய கும்பல்


சேலையூர் அருகே ஓசியில் உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய கும்பல்
x

சேலையூர் அருகே ஓசியில் உணவு கேட்டு ஓட்டலை சூறையாடிய கும்பல், எண்ணை சட்டியை தட்டிவிட்டனர். இதில் கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு 3 பேர் காயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு

ஓசியில் உணவு கேட்டு ரகளை

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஜெயமணி (வயது 59) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இவரது ஓட்டலுக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் கார்த்திக் ஆகியோர் 5 பார்சல் உணவு வாங்கி விட்டு அதற்கு பணத்தை பின்னர் வந்து தருவதாக கூறினா்.

ஆனால் அதற்கு மறுத்த ஜெயமணி, பணத்தை கொடுத்து விட்டு பார்சலை எடுத்து செல்லுங்கள் என கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓசியில் உணவு தராததால் ஆத்திரம் அடைந்த இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டு, தங்கள் நண்பர்களுடன் மீண்டும் ஓட்டலுக்கு வந்து ரகளை செய்தனர்.

3 பேர் காயம்

அப்போது ஓட்டலில் வடை சுட வைத்து இருந்த கொதிக்கும் எண்ணெய்யை கீழே தட்டி விட்டனர். மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதில் எண்ணெய் சட்டியை தட்டிவிட்டபோது அதில் இருந்த கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு ஓட்டல் உரிமையாளர் ஜெயமணி, அவருடைய மகன் மணிகண்டன்(29), ஊழியர் நேமராஜ்(29) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மாடம்பாக்கத்தை சேர்ந்த அஜித்(27), கார்த்திக் என்ற அரிகரன்(35), பிரவீன் என்ற ஜாக்கோ(20), சிவா(28) உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story