பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 16 Jan 2023 6:45 PM GMT (Updated: 16 Jan 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம்

விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் சாலை அப்துல் கலாம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 45). இவர் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை இவர் வேலைக்கு செல்வதற்காக விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தை கடந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், திடீரென மஞ்சுளாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர்.

வாலிபர்களுக்கு வலைவீச்சு

உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதைப்பார்த்ததும் பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1¾ லட்சமாகும்.

இதுகுறித்து மஞ்சுளா, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் போலீஸ் நிலையம் அருகில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story