ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் வழிகாட்டி பெயர்ப்பலகை


ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் வழிகாட்டி பெயர்ப்பலகை
x

ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் வழிகாட்டி பெயர்ப்பலகை

தஞ்சாவூர்

தஞ்சையில் உலக பிரசித்திப்பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைக்காண வெளிமாவட்டங்கள் மட்டும் இன்றி வெளிமாநிலம், வெளிநாட்டினரும் தஞ்சைக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வசதிக்காக தஞ்சை ரெயில் நிலையம் அருகே வழிகாட்டி பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் அந்த வழிகாட்டி பெயர்ப்பலகை முறையான பராமரிப்பின்றி தற்போது ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. குறிப்பாக பலகையை தாங்கி பிடித்துள்ள இரும்பு கம்பிகளின் அடிப்பகுதி துருப்பிடித்து முறிந்துள்ளது.

இதன்காரணமாக பெயர்பலகை அதன்அருகே உள்ள சுவரில் சாய்ந்த நிலையில் இருக்கிறது. பலத்த காற்று வீசும் போதும் வழிகாட்டிப்பெயர்பலகை கீழே விழுந்து விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதேபோல ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகையும் முறிந்து விழும் நிலையில் நின்று கொண்டிருக்கிறது. மேற்கண்ட வழிகாட்டி பெயர்ப்பலகை மற்றும் விழிப்புணர்வு பலகை மூலம் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் அவற்றை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story