முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி தானியாவுக்கு வீட்டு மனை பட்டா: முதல்-அமைச்சர் வழங்கினார்


முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி தானியாவுக்கு வீட்டு மனை பட்டா: முதல்-அமைச்சர் வழங்கினார்
x

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமி தானியாவுக்கு வீட்டுமனை பட்டாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் தானியா. இவர் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்து வந்தார்.

தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த முதல்-அமைச்சர், சிறுமி தானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 29.8.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

வீட்டுமனை பட்டா

அதனைத்தொடர்ந்து, 2-வது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியாவின் இல்லத்திற்கு கடந்த 8.2.2023 அன்று முதல்-அமைச்சர் நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக சிறுமி தானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனை பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் முதல்-அமைச்சரால் நேற்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது, சா.மு.நாசர் எம்.எல்.ஏ. மற்றும் சிறுமி தானியாவின் பெற்றோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story