கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் திடீர் சாவு


கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் திடீர் சாவு
x

குளித்தலை அருகே கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பு காரணமாக திடீரென இறந்தார்.

கரூர்

கபடி வீரர்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையூரில் நேற்று முன்தினம் இரவு கபடி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டி பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அருகே உள்ள காச்சக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 26) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு விளையாடினார். அந்த அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. பின்னர் அடுத்த போட்டி வரும் வரை வீரர்கள் ஓய்வெடுக்க சென்றுள்ளனர். அப்போது மாணிக்கம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தனது சக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

நெஞ்சுவலியால் சாவு

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அய்யர்மலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், மாணிக்கத்தின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் தனது தாயார் மாரியம்மாளுடன் மாணிக்கம் வசித்து வந்துள்ளார்.

தினந்தோறும் காச்சக்காரன்பட்டியில் இருந்து கரூரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வருவாராம். கடந்த 10 ஆண்டுகளாக தனது நண்பர்களுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி பல இடங்களில் பரிசுகள் பெற்று வந்துள்ளார். இந்தநிலையில், கணக்கப்பிள்ளையூரில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்ற மாணிக்கம் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் பரிசுக்கான கோப்பை

இந்தநிலையில் மாணிக்கத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக கணக்கப்பிள்ளையூரில் கபடி போட்டி நடத்திய விழாக்குழுவினர் முதல் பரிசுக்கான கோப்பை மற்றும் பரிசுத்தொகை ரூ.20 ஆயிரத்தை மாணிக்கத்தின் குடும்பத்தாரிடம் வழங்கினர். கபடி விளையாட வந்த வீரர் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story