விழுப்புரத்தில் காதல் மனைவி கழுத்தை அறுத்துக்கொலை தொழிலாளி வெறிச்செயல்


விழுப்புரத்தில் காதல் மனைவி கழுத்தை அறுத்துக்கொலை தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் காதல் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் சாலாமேடு ஜீவராஜ் நகர் 7-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவரும், திவ்யா(27) என்பவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை திவ்யா, தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அருகில் வசிக்கும் பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

தகவலின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு திவ்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

குடும்ப பிரச்சினை

வடிவேல் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் திவ்யா தனது கணவர் வடிவேலுவிடம் கோபித்துக்கொண்டு விழுப்புரம் கே.கே.சாலை மணி நகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை வடிவேல், தனது மாமனார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மனைவி திவ்யாவிடம் சமாதானம் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் கணவன்- மனைவியிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வடிவேல், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து திவ்யாவின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

கணவருக்கு வலைவீச்சு

மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற வடிவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையில் மனைவியை அவரது கணவரே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story