விக்கிரவாண்டி அருகே கரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; போக்குவரத்து பாதிப்பு


விக்கிரவாண்டி அருகே  கரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:45 PM GMT)

விக்கிரவாண்டி அருகே கரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து லாரி ஒன்று கரும்பு ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை நோக்கி வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள வளத்தி நீலாம் பூண்டியை சேர்ந்த தியாகராஜன்(36) என்பவர் லாரியை ஓட்டினார். நேற்று இரவு 7.40 மணி அளவில் முண்டியம்பாக்கம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கரும்பு கட்டுகள் சாலை முழுவதும் சிதறி கிடந்ததால் திருச்சி-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், காத்தமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக திருப்பி விட்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஊழியர்கள், பொக்லைன் எந்திர உதவியுடன் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியையும், கரும்பு கட்டுகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் திருச்சி-சென்னை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story