வேலைக்கு சென்ற மெக்கானிக் கிணற்றில் பிணமாக மீட்பு


வேலைக்கு சென்ற மெக்கானிக் கிணற்றில் பிணமாக மீட்பு
x

கரூர் அருகே வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து வெளியே சென்ற மெக்கானிக் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

கரூர்

மெக்கானிக்

கரூர் அருகே உள்ள அரசு காலனி லட்சுமி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்கிற ஈஸ்வரன் (வயது 44). மெக்கானிக். இவர் கரூர் 80 அடி சாலையில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 27-ந்தேதி காலை வழக்கம்போல் ஈஸ்வரன் தனது மனைவியிடம் மெக்கானிக் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் மஞ்சுளா தனது கணவரை உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

கிணற்றில் இருந்து பிணமாக மீட்பு

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிணற்றில் பிணமாக கிடந்த அந்த ஆணின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

வழக்குப்பதிவு

பின்னர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டது மெக்கானிக் ஈஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஈஸ்வரன் எதற்காக இங்கு வந்தார்? கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story