பட்டாபிராம் அருகே சாலையில் சென்ற மினிவேன் தீப்பிடித்து எரிந்தது - குழந்தை உள்பட 6 பேர் உயிர் தப்பினர்


பட்டாபிராம் அருகே சாலையில் சென்ற மினிவேன் தீப்பிடித்து எரிந்தது - குழந்தை உள்பட 6 பேர் உயிர் தப்பினர்
x

பட்டாபிராம் அருகே சாலையில் சென்ற மினிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் மினிவேனில் பயணம் செய்த குழந்தை உள்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு சொந்தமான மினிவேனை, ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகரைச் சேர்ந்த விஜயகுமார்(வயது 28) என்பவர் கடந்த 3 நாட்களாக வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார்.

நேற்று காலை விஜயகுமார், 2 பெண்கள், 2 ஆண்கள், 1 கைக்குழந்தை என 5 பேரை மினிவேனில் ஏற்றிக்கொண்டு காஞ்சீபுரம் சென்றார். பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அருகே சி.டி.எச். சாலையில் சென்றபோது திடீரென மினிவேனின் முன்புறம் உள்ள என்ஜினில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

உடனடியாக விஜயகுமார் சாலையோரமாக மினிவேனை நிறுத்தினார். பின்னர் அதில் இருந்த குழந்தை உள்பட 5 பேருடன் விஜயகுமாரும் மினிவேனில் இருந்து கீழே இறங்கினார். காற்றின் வேகத்தால் தீ மளமளவென மினிவேன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் மினிவேனில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மினிவேன் முற்றிலும் எரிந்து நாசமானது. உடனடியாக கீழே இறங்கி விட்டதால் மினிவேனில் பயணம் செய்த குழந்தை உள்பட 5 பேர் மற்றும் டிரைவர் விஜயகுமார் என 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story