ரேடியம் போன்று ஒளிரும் கண் கொண்ட அதிசய மீன் சிக்கியது

பாம்பனில் மீனவர்கள் வலையில் ரேடியம் போன்று ஒளிரும் கண் கொண்ட அதிசய மீன் சிக்கியது.
ரேடியம் போன்று ஒளிரும் கண் கொண்ட அதிசய மீன் சிக்கியது
Published on

ராமேசுவரம், 

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. அந்த தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் பவளப்பாறைகள் அதிக அளவில் உள்ளதால் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு உகந்த பகுதியாக கருதப்படுகின்றது. அதனால் இயற்கையாகவே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பல அதிசய மீன்கள் வலைகளில் சிக்குகின்றன.

இந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்க சென்று வந்த மீனவர்கள் வலையில் அரிய வகை 'லோப்சீலா' என்று சொல்லக்கூடிய மீன் ஒன்று நேற்று சிக்கியது. கருப்பு மற்றும் ஒருவித பழுப்பு நிறத்திலும், கண்கள் பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை கொண்டதாகவும் இருந்தது.

2 அடி நீளமும், 8 கிலோ எடையும் கொண்ட அந்த மீனை வியாபாரி ஒருவர் விலைக்கு வாங்கி சென்றார்.

லோப் சீலா மீனை மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளும் ஆய்வு செய்தனர். இது பற்றி அந்த ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தமிழ்மணி கூறியதாவது:-

இந்த வகை மீனை தமிழில் எண்ணெய் மீன் என்று அழைக்கலாம். மிக ஆழ்கடல் பகுதியில் மட்டுமே இருக்கும். மற்ற மீன்களை விட இந்த ரக மீன்களின் உடலில் எண்ணெய் பசை அதிகமாகவே இருக்கும். இரவு நேரத்தில் கடலில் நீந்தும் போது, அவற்றின் கண்கள் ரேடியம் போன்று ஒளிருவதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த லோப் சீலா மீன், மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com