மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு புதிய வீடு


மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு புதிய வீடு
x

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு புதிய வீடு

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்,

சேதுபாவாசத்திரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு புதிய வீட்டினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஒப்படைத்தார்.

மாற்றுத்திறனாளி பெண்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள செறுபாலக்காட்டை சேர்ந்தவர் லதா (வயது40). மாற்றுத்திறனாளியான இவருக்கு நிவேதா (16) என்ற மகளும், ஹரி (10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லதாவின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் லதா வீடு இன்றி கஷ்டப்பட்டு வந்தார். இதனை அறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.

வீடு ஒப்படைப்பு

இதனை கொண்டு புதிய வீடு கட்டப்பட்டது. நேற்று அசோக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் பஹாத் முகமது வரவேற்று பேசினார். இதில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ருக்குமணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜலெட்சுமி மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க ஒன்றிய செயலாளர் முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார்.

பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு சாதி சான்றிதழ்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அமைய உள்ள பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார். பின்னர் பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு பின்புறம் வாழும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் 30 பேருக்கு சாதி சான்றிதழை கலெக்டர் நேரில் வழங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், தாசில்தார் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா புகழேந்தி, பள்ளி வளர்ச்சி குழு பொதுச்செயலாளர் புகழேந்தி, வார்டு உறுப்பினர் நாகலட்சுமி ரத்தினம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். சாதி சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story