வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய புயல் சின்னம்?


வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய புயல் சின்னம்?
x

வரும் 13 மற்றும் 16 தேதிகளில் வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயல் சின்னம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்து மாண்டஸ் புயல், மாமல்லபுரத்திற்கு அருகே நேற்று அதிகாலை கரையைக் கடந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்கைமேட் வானிலை மைய தலைவர் மகேஷ் பலாவத் கூறியிருப்பதாவது:

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 13 ஆம் தேதிக்கு பின்னர் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளது. மாண்டஸ் புயல் உருவான அதே பகுதியில் இந்த புதிய காற்றழுத்த மையம் உருவாக வாய்ப்புள்ளது. எனினும், இது புயலாக உருவாக வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியல் முதல் 28 செல்சியஸ் வெப்பநிலை காணப்படும் என கூறினார்.

புதிய காற்றழுத்த மையம் குறித்து வெதர்மேன் பிரதீப்ஜான் கூறியதாவது:

காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும். வரும் 16 ஆம் தேதி வாக்கில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

ஆனால், இந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் வலுவிழப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story