கீழ்பென்னாத்தூர் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை


கீழ்பென்னாத்தூர் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை
x
தினத்தந்தி 10 April 2023 6:45 PM GMT (Updated: 10 April 2023 6:46 PM GMT)

கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு நர்சு அதே கிணற்றில் குதுித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு நர்சு அதே கிணற்றில் குதுித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடியை அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசிப்பவர் சின்னராசு (வயது 38). இவர் அருகிலுள்ள கானலாபாடியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சூர்யா (வயது 32), சோமாசிபாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்்தார். இவர்களுக்கு லக்ஷன் (4), உதயன் (1) ஆகிய 2 மகன்கள். சின்னராசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், அடிக்கடி குடும்ப பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சின்னராசு வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனம் உடைந்த நிலையில் இருந்த சூர்யா தனது 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கரை பகுதிக்கு சென்றார். அங்குள்ள விவசாய கிணற்றில் 2 மகன்களை வீசிக்கொன்ற அவர் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிணற்றில் பிணம்

இந்த நிலையில் இரவு ஒரு மணியளவில் சின்னராசு வீடு திரும்பியபோது கதவு திறந்தே இருந்தது. வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை. திடுக்கிட்ட அவர் அக்கம் பக்கத்தில் தேடினார் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டபோது மனைவி சூர்யா போனை எடுக்கவில்லை. அந்த போன் நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டே இருந்தது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள விவசாய கிணற்றின் மேல் பகுதியில் செல்போன் ஒலி கேட்பதாக கூறினர்.

உடனே சின்னராசு அங்கு சென்றார். அவர்கள் கிணற்றில் குதித்து தேடியதில் மனைவி சூர்யா, குழந்தை உதயன் ஆகியோரை நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பிணமாக மீட்டனர். லஷன் கிடைக்கவில்லை.

தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தண்ணீர் வெளியேற்றம்

லஷனின் உடலை தேட தீயனைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி லஷனை தேடி வருகின்றனர்.

இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்தும், சின்னராசுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story