திருச்சி ரெயில் நிலையம் அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டது


திருச்சி ரெயில் நிலையம் அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டது
x

திருச்சி ரெயில் நிலையம் அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

திருச்சி,

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகே உள்ள எடமலைப்பட்டிபுதூர் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பயணிகள் ரெயில் ஒன்று பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று மாலை 3 மணி அளவில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.

அந்த ரெயில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எதிர்புரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாள வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த பயணிகள் ரெயிலில் இருந்த 3-வது மற்றும் 6-வது பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டன. அந்த ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ரெயில்வே ஊழியர்கள்

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி, தடம் புரண்ட தண்டவாள பகுதியை சரி செய்தனர். பின்னர் அந்த பயணிகள் ரெயில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

2 மணி நேரம் தாமதம்

பயணிகள் ரெயில் தடம் புரண்ட சம்பவத்தால் குருவாயூரில் இருந்து திருச்சி வழியாக சென்னை வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. வழக்கமாக இந்த ரெயில் மாலை 3 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்திற்கு வரும். இந்த சம்பவத்தால் 2 மணி நேரம் தாமதமாக திருச்சி ரெயில் நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதேபோல், மயிலாடுதுறை-கோவை ஜனாசதப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய ரெயில்களும் 20 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை தாமதமாக திருச்சி ரெயில் நிலையம் வந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story