வீட்டின் கழிவறையில் தவறி விழுந்து உடற்கல்வி ஆசிரியர் பலி


வீட்டின் கழிவறையில் தவறி விழுந்து உடற்கல்வி ஆசிரியர் பலி
x

கரூரில் வீட்டின் கழிவறையில் தவறி விழுந்து உடற்கல்வி ஆசிரியர் பலியானார்.

கரூர்

உடற்கல்வி ஆசிரியர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் டி.என்.கச்பி. காலனியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 59). இவர் கரூர் ஆசாத் சாலையில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சதாசிவம் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. மேலும் வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதாசிவம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் கழிவறையில் தலைகுப்புற விழுந்த நிலையில் சதாசிவம் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் சதாசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

சிறுநீரக கோளாறு

முதற்கட்ட விசாரணையில், சதாசிவத்திற்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது 2 மனைவிகளையும் பிரிந்து, சதாசிவம் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் கடந்த மார்ச் மாதம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் கழிவறைக்கு சென்றபோது கால் தவறி விழுந்து இறந்து உள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story