குடும்பத்துடன் தலைமறைவான தனியார் நிதிநிறுவன உரிமையாளர்


குடும்பத்துடன் தலைமறைவான தனியார் நிதிநிறுவன உரிமையாளர்
x

செய்யாறு போலீசில் தினமும் புகார் மனுக்கள் கொடுப்பதால் குடும்பத்துடன் தனியார் நிதிநிறுவன உரிமையாளர் தலைமறைவானார். தொடர்ந்து அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு போலீசில் தினமும் புகார் மனுக்கள் கொடுப்பதால் குடும்பத்துடன் தனியார் நிதிநிறுவன உரிமையாளர் தலைமறைவானார். தொடர்ந்து அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.

கவர்ச்சிகரமான திட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனம் பல மாவட்டங்களில் தீபாவளி, பொங்கல் சிட் பண்டு, தங்கத்தின் மீது டெபாசிட், வீட்டுமனை மீதான டெபாசிட் என பல வகையில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்தது. இதனை நம்பி ஏராளமாக பொதுமக்கள் பணத்தை கட்டினர்.

இந்த நிலையில் தனியார் நிறுவனம் தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டிய பண்டு பொருட்களை வழங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பணம் கட்டிய பொதுமக்கள் மற்றும் ஏஜென்டுகள் 500-க்கும் மேற்பட்டோர் கடந்த அக்டோபர் மாதம் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அப்போது நிதி நிறுவனத்தில் யாரும் இல்லாததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர் 15 நாட்களுக்குள் பொருட்களை தருவதாக 'வாட்ஸ் அப்' பதிவு மூலம் உத்தரவாதம் அளித்தார்.

மேலும் வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்திற்கு நிறுவனம் சார்பில் 'பாண்டு' பத்திரம் எழுதி கொடுத்ததாகவும், அதில் டிசம்பர் மாதம் 10-ந்தேதி கொடுக்கப்படும் என குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

குடும்பத்துடன் தலைமறைவு

தொடர்ந்து கடந்த 10-ந்தேதி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முகவர்கள் செய்யாறு நகரில் தீபாவளி பண்டு சீட்டு நடத்திய நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்த போது அலுவலகத்தில் யாரும் இல்லை. நிறுவனத்தின் உரிமையாளரின் செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் அவர் குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சில பெண் முகவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் நேரில் வரவேண்டும் எனக்கூறி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், நீங்கள் கொடுக்கும் புகார்களை பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

புகார் மனுக்கள்

அதைத் தொடர்ந்து இதுவரை 250 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் குறைந்தது 50 புகார் மனுக்களை பாதிக்கப்பட்டவர்கள் செய்யாறு போலீசில் கொடுக்கின்றனர். அந்த புகார் மனுக்கள் மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள நிதி நிறுவன உரிமையாளர் சம்சுமைதீனை தேடி வருகின்றனர்.

மேலும் சம்சுமைதீன், குடும்பத்துடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வீடு காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருககீர்த்தி, கோபிநாதன் ஆகியோர் முன்னிலையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா அந்த வீட்டிற்கு சீல் வைத்தார்.

உறவினர் வீட்டுக்கு 'சீல்'

இந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளரின் உறவினரான வந்தவாசி பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நிஷா என்பவரது வீட்டில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சாந்தலிங்கம் மற்றும் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்ய சென்றனர். அப்போது வீடு பூட்டி இருந்தது.

இதனையடுத்து போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து வீட்டை பூட்டி 'சீல்' வைத்தனர்.


Next Story