மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்


மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
x

கோட்டைப்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.

புதுக்கோட்டை

ராக்கெட் குண்டு சிக்கியது

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே மீமிசலை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசன், வடிவேல். இவர்கள் 2 பேரும் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் வலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டு ஒன்று சிக்கியது.

இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் அந்த ராக்கெட் குண்டை கைப்பற்றி கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

பாதுகாப்பான இடத்தில்...

மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் ராக்கெட் குண்டை கைப்பற்றி போலீஸ் நிலையத்திலிருந்து பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு ேபாய் வைத்தனர். மேலும் அதனை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மருதம் பகுதியில் அமைந்துள்ள கமாண்டோ அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அவர்கள் வந்து ராக்கெட் குண்டை பெற்றுக்கொண்டு அதனை செயலிழக்க செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

கடலில் சிக்கியவர்களை மீட்க...

இந்த வகையான ராக்கெட் குண்டு `இலுமினேஷன் பாம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் குண்டு ராணுவம், கடற்படை வீரர்கள் பயன்படுத்துவதாகும். கடலில் ஏற்படும் விபத்துகளில் பொதுமக்கள் சிக்கும்போது இந்த ராக்கெட் குண்டு மீது லைட் வைத்து வெடிக்க வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் கடலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் காப்பாற்ற யாரோ வருகிறார்கள் என்று இதனை பார்த்து தெரிந்து கொண்டு பதற்றமில்லாமல் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது இந்த ராக்கெட் குண்டு வெடிக்காமல் கடலில் விழுந்திருக்க கூடும். அந்த ராக்கெட் குண்டு மீனவர் வலையில் சிக்கி உள்ளது.

1 More update

Next Story