31 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான திட்டம் - கலெக்டர் தகவல்


31 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான திட்டம் - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் 31,317 என்ஜினீயரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

தமிழக முதல்-அமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நான் முதல்வன் என்ற திட்டத்தினை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பள்ளி படிப்பில் மாணவர்கள் படிக்கும்போது உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது பற்றிய போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைகல்வி மற்றும் உயர்நிலைகல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு அனுபவரீதியாக இணையதளம் வாயிலாக கற்றல் திறன்களும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இந்த திட்டம் அமைந்துள்ளது. நான் முதல்வன் திட்டமானது கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தொடர்புடைய தகவல்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முதன்மை திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயிற்சி பெறவும் அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும். மாநில கல்வியின் நிறுவனங்களில் மாணவர்களுக்கு தொழில் மற்றும் கல்வி வழிகாட்டுதலையும் உறுதி செய்திடவும் இத்திட்டம் அடிப்படையாக அமைகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 34 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளை சார்ந்த சுமார் 31,317 என்ஜினீயரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை முழுமையாக அறிந்து கொண்டு வேலைவாய்ப்புகளின் போது மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கு இந்த திட்டம் அடிப்படையாக அமைகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story