கல்விக்கடன் மேளா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


திருவண்ணாமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள கல்விக்கடன் மேளா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள கல்விக்கடன் மேளா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

கல்விக்கடன் மேளா

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் வருகிற 11-ந் தேதி கல்விக்கடன் மேளா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி என 31 கல்லூரிகள் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிப்பு தொடர வேண்டுமென என்னிடம் கல்விகடன் நிதியுதவி கேட்டு வருகின்றனர். கலெக்டருக்கு அரசு வருடத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

மாணவ-மாணவிகளுக்கு உதவி

அதன் அடிப்படையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறேன். கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரியில் சேர பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த இன்னல்களை போக்கிடும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் மேளா வருகிற 11-ந் தேதி கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.

12 வங்கிகள் பங்கேற்பு

மாவட்டத்தில் உள்ள அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மாணவ, மாணவிகளை சிரமமின்றி வந்து செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் மாணவ, மாணவிகள் https://www.vidhyalakshmi.co.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே பதிவு செய்யும் மையம் அமைக்க வேண்டும்.

அதேபோல் கல்லூரி ஆசிரியர்கள் கல்விக்கடன் மேளா நடத்திட பொறுப்பு அலுவலர்களை நியமிக்கப்பட்டு அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த கல்விக்கடன் மேளாவில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீயஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி என 12 வங்கிகள் கலந்து கொள்ள உள்ளன.

மேலும் இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயனுள்ளவாறு அமைந்திட உறுதுணையாக அனைத்து துறை அலுவலர்களும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மகளிர் திட்ட இயக்குனர் சையத் சுலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் தனகீர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story