மீஞ்சூர் அருகே வல்லூர் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து


மீஞ்சூர் அருகே வல்லூர் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 13 Aug 2023 2:00 PM GMT (Updated: 13 Aug 2023 2:01 PM GMT)

வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் முதல் அலகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

தீ விபத்து

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில் தமிழ்நாட்டிற்கு 70 சதவீதமும், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு 30 சதவீதமும் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அலகில் டர்பன் ஜெனரேட்டர் திடீரென வெடித்து தீ பிடித்தது. தீ மளமள டர்பன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

மின் உற்பத்தி பாதிப்பு

அனல்மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் உடனே ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக 1-வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அலகில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க 1 மாதம் வரை ஆகலாம் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story