துறையூர், திருவெறும்பூர் பகுதிகளில் வீடுகளில் திடீர் தீ


துறையூர், திருவெறும்பூர் பகுதிகளில் வீடுகளில் திடீர் தீ
x

துறையூர், திருவெறும்பூர் பகுதிகளில் வீடுகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருச்சி

வீடு தீப்பற்றி எரிந்தது

துறையூர் நல்லவாண்டு சந்தில் வசிப்பவர் தங்கவேலின் மனைவி செல்லம்மாள்(வயது 70). கூலி வேலை செய்யும் இவர், அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அந்த கூரை வீட்டில் மராமத்து செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த வீட்டில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) பாலசந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மருதை, சதீஷ்குமார், வினோத், ஜெயராமன், பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் கசிவால்...

இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் சிவா(43). இவர் வீட்டை பூட்டிவிட்டு, தனது தாய் சந்திராவுடன் சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. மாலையில் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது சிவாவின் வீட்டில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த திருவெறும்பூர் போலீசார், இச்சம்பவம் குறித்து நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டிற்குள் பார்த்தபோது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story