நொச்சிக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கி வாலிபர் சாவு


நொச்சிக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கி வாலிபர் சாவு
x

நொச்சிக்குப்பம் அருகே ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலியானார்.

சென்னை

சென்னை மயிலாப்பூர், நாட்டு சுப்புராயன் 2-வது தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 27). இவர், அடையாறு அருகே பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

தினேஷ்குமார் நேற்று மதியம் சென்னை மெரினா கடற்கரைக்கு தனியாக சென்று இருந்தார். பின்னர் நொச்சிக்குப்பம் அருகே தினேஷ் குமார் கடலுக்குள் இறங்கி நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கிக் கொண்டார். இதில் தினேஷ் குமார் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.இதனைகண்டு அருகே இருந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கிருந்த மெரினா கடலோர மீட்புப்படை குழுவினர், கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த தினேஷ்குமாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார், தினேஷ் குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தினேஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story