தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2023 6:37 PM GMT (Updated: 25 Oct 2023 5:44 AM GMT)

வேலூரில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

வேலூர்

வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் விக்கி என்ற ரோகித்ராஜ் (வயது 19). 10-ம் வகுப்பு வரை படித்த இவர் விடுதலை படத்தில் போலீஸ்காரராக நடித்து இருந்தார். இந்த நிலையில் ரோகித்ராஜ் நேற்று முன்தினம் இரவு நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேலூரை நோக்கி சென்றார்.

வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே சென்னை-பெங்களுரு அணுகுசாலையில் பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச்சுவரின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரோகித்ராஜ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story