கடை உரிமையாளரிடம் லீசுக்கு கொடுத்த ரூ.6 லட்சத்தை கேட்டு மொட்டை மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்


கடை உரிமையாளரிடம் லீசுக்கு கொடுத்த ரூ.6 லட்சத்தை கேட்டு மொட்டை மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
x
தினத்தந்தி 9 July 2022 2:49 AM GMT (Updated: 9 July 2022 3:53 AM GMT)

கடை உரிமையாளரிடம் லீசுக்கு கொடுத்த ரூ.6 லட்சத்தை கேட்டு வாலிபர் ஒருவர் மொட்டை மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

சென்னை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). இவர், ஆவடி அடுத்த மோரை ராகவேந்திரா நகரில் கடை ஒன்றை ரூ.6 லட்சம் கொடுத்து லீசுக்கு எடுத்து கடந்த 8 மாதமாக பேக்கரி கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக கடையில் சரியாக வியாபாரம் நடைபெறவில்லை.

இதனால் அஜித்குமார் கடையை மூடிவிட நினைத்தார். எனவே நேற்று காலை கடை உரிமையாளர் சுந்தரிடம் தான் லீசுக்கு கொடுத்த ரூ.6 லட்சத்தை தரும்படி கேட்டார். அதற்கு அவர், "நீ கொடுத்த பணத்தில்தான் அந்த கட்டிடத்தை கட்டி உள்ளேன். இப்போது என்னிடம் பணம் இ்ல்லை. தொடர்ந்து கடையை நடத்து. பின்னர் தருகிறேன்" என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், "எனக்கு உடனே பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்" என்று கூறி திடீரென கடையின் மொட்டை மாடிக்கு சென்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வரச்செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story