மதுரை அருகே செல்போன் பறித்ததாக வாலிபர் அடித்துக்கொலை


மதுரை அருகே  செல்போன் பறித்ததாக வாலிபர் அடித்துக்கொலை
x

மதுரை அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறித்ததாக வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

மதுரை

செக்கானூரணி,


மதுரை அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறித்ததாக வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

செல்போன் பறிப்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது.

இந்தநிலையில் பொன்னாங்கன் கோவிலில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வைத்திருந்த செல்போனை கருமாத்தூர் தவசிதேவர் காலனி பகுதியை சேர்ந்த பாண்டி மகன் நீதி(வயது 21) மற்றும் அவரது கூட்டாளிகள் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

வாலிபர் அடித்துக்கொலை

இதை கவனித்த தேனி மாவட்ட வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் செல்போன் பறித்ததாக கூறப்படும் நீதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் நீதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நீதியை அங்கிருந்தவர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நீதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story