திடீரென மயங்கி விழுந்து இறந்த கோவில் காளை


திடீரென மயங்கி விழுந்து இறந்த கோவில் காளை
x
தினத்தந்தி 12 July 2023 7:45 PM GMT (Updated: 13 July 2023 11:44 AM GMT)

திடீரென மயங்கி விழுந்து இறந்த கோவில் காளை

தஞ்சாவூர்

தஞ்சை அருகே கோவிலுக்கு சொந்தமான காளை மாடு திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இதையடுத்து அந்த காளை மாட்டை பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

கோவில் காளை

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டை கிராமத்தில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வேண்டுதலாக செல்லப்பன்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் காளைக்கன்றுக்குட்டியை வாங்கி வளர்த்து வந்தனர். 6 ஆண்டுகளாக அந்த கன்றுக்குட்டியை இளைஞர்கள் வளர்த்து வந்த நிலையில் தற்போது அது பெரிய காளைமாடாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கோவிலுக்கு சொந்தமான காளை மாட்டுக்கு தீவனம் வைத்து விட்டு சென்றனர். தீவனத்தை சாப்பிட்டு விட்டு கோவில் பகுதியில் அந்த காளை சுற்றித்திரிந்்தது.

திடீரென மயங்கி விழுந்து இறந்தது

சிறிது நேரத்தில் அந்த காளைமாடு திடீரென மயங்கி கீழே விழுந்தது. வழக்கம்போல் உற்சாகமாக சுற்றித்திரிந்த மாடு கீழே மயங்கி விழுந்ததால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்து அவரை வரவழைத்தனர். இதையடுத்து கால்நடை டாக்டர் பரிசோதனை செய்து விட்டு காளை மாடு இறந்து விட்டதாக கூறினார்.

கிராம மக்கள் கண்ணீர்

இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவியது. கிராம மக்கள் அனைவரும் கோவில் முன்பு திரண்டனர். பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

தொடர்ந்து மாட்டின் உடலை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து கிராம மக்கள் அனைவரும் வணங்கினர்.

அடக்கம் செய்தனர்

பின்னர் இறந்த மாட்டின் உடலை கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கோவில் வளாகத்திலேயே அடக்கம் செய்தனர்.

கோவில் காளை இறந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Related Tags :
Next Story