பெரியகுளத்தில் பெண் சாவில் திருப்பம்:குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்:கணவர் கைது


பெரியகுளத்தில் பெண் சாவில் திருப்பம்:குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்:கணவர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:46 PM GMT)

பெரியகுளத்தில் குடும்ப தகராறில் பெண்ணை கழுத்தை நெரித்து ெகான்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

பெண் சாவு

பெரியகுளம், வடகரை வி.ஆர்.பி.தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (வயது 38). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரம்ஜான்பேகம் (36). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27-ந்தேதி இரவு ரம்ஜான்பேகம் இறந்து விட்டார்.

இதையடுத்து அபுபக்கர் சித்திக், உடல்நிலை சரியில்லாமல் மனைவி இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை அவரது வீட்டிற்கு உறவினர்கள் துக்கம் விசாரிக்க சென்றனர். இந்நிலையில் ரம்ஜான்பேகம் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் பெரியகுளம் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரம்ஜான்பேகம் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அதில் கழுத்தை பிடித்து நெரித்ததால் மூச்சுத்திணறி ரம்ஜான் பேகம் இறந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ரம்ஜான்பேகம் கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அபுபக்கர் சித்திக் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

கணவர் கைது

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் மனைவியை கொன்றதை ஒப்பு கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- எனக்கும், எனது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று இதுதொடர்பாக எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் ரம்ஜான்பேகத்தை கழுத்தை நெரித்தும், அடித்தும் ெகான்றேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார். குடும்ப தகராறில் மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story