பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொலை - பிரேத பரிசோதனையில் தகவல்


பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொலை - பிரேத பரிசோதனையில் தகவல்
x

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பமாக வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

காஞ்சிபுரம்

மர்மமான முறையில் சாவு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈ.வி.பி.டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 83), இவரது மனைவி ஜெய்பார்வதி (72), இவர்களது மகன் சக்திவேல் (46). 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் தனது பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு சென்றவர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பெற்றோர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய பாரத் ஆகியோர் தலைமையில் சென்ற போலீசார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வயதான தம்பதிகள் இருவரின் உடல்களை் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக அவரது மகன் சக்திவேலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் :-

கணேசன் அரிசி ஆலை நடத்தி வந்த நிலையில் அவரது மகன் சக்திவேல் சொந்தமாக தயாரித்து இயக்கி 3 திரைப்படங்களை எடுத்ததாகவும் அந்த திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் ஏராளமான பணம் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் சக்திவேலுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும் திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் இருவருக்கும் விவாகரத்து நடந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது சக்திவேல் கட்டுமான தொழில் செய்து கொண்டு தனது பெற்றோரை கவனித்து வந்துள்ளார். அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்த போது சக்திவேல் தனது பெற்றோரை நல்ல முறையில் பார்த்து வந்ததாக தெரிவித்தனர்.

கழுத்தை நெரித்து கொலை

மேலும் அவரது பெற்றோர் வயதானவர்கள் என்பதால் வெளி நபர்கள் யாரும் உள்ளே சென்று விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது வீட்டை பூட்டி சென்றதும் தெரியவந்தது. மேலும் வயதான கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏதாவது நடந்ததா என்ற கோணத்திலும் வயதான தம்பதி வீட்டில் இருப்பதை அறிந்து கொள்ளை அடிக்கலாம் என நினைத்து வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தம்பதிகளை கொலை செய்துவிட்டு பொருட்களை எடுத்து சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இருவரின் இறப்புக்கான காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கைகாக காத்திருந்த போலீசார் முதல் கட்டமாக கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story