ஆசனூர் அருகே சரக்கு வேனை வழிமறித்த காட்டு யானை; கரும்பு இல்லாத ஆத்திரத்தில் தக்காளி பெட்டியை தூக்கி வீசியது


ஆசனூர் அருகே சரக்கு வேனை வழிமறித்த காட்டு யானை; கரும்பு இல்லாத ஆத்திரத்தில்  தக்காளி பெட்டியை தூக்கி வீசியது
x

ஆசனூர் அருகே சரக்கு வேனை வழிமறித்த காட்டு யானை, அதில் கரும்பு இல்லாத ஆத்திரத்தில் தக்காளி பெட்டியை தூக்கி வீசியது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே சரக்கு வேனை வழிமறித்த காட்டு யானை, அதில் கரும்பு இல்லாத ஆத்திரத்தில் தக்காளி பெட்டியை தூக்கி வீசியது.

வழிமறித்த காட்டு யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மதியம் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. அப்போது அந்த வழியாக ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு வேன் சென்றது. உடனே அந்த சரக்கு வேனை காட்டு யானை வழிமறித்தது. இதனால் பயந்து போன டிரைவர் சரக்கு வேனை நிறுத்தினார். பின்னர் சரக்கு வேனின் பின்புறத்துக்கு வந்த காட்டு யானை அங்கு கரும்பு இருக்கிறதா? என துதிக்கையால் தேடி பார்த்தது. ஆனால் அங்கு கரும்புகள் இல்லை.

தூக்கி வீசியது

இதனால் ஆத்திரம் அடைந்த காட்டு யானை, சரக்கு வேனில் வைக்கப்பட்டிருந்த தக்காளியை பெட்டியை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் தக்காளி பெட்டி ரோட்டில் விழுந்தது. எனினும் ஆத்திரம் அடங்காத காட்டு யானை, காலால் தக்காளி பெட்டியை எட்டி உதைத்தது. பின்னர் சாலையில் அங்கும், இங்குமாக உலா வந்த காட்டு யானை, சிறிது நேரத்தில் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் யானை சென்றதும், டிரைவர் சரக்கு வேனை விட்டு இறங்கி வந்து, தக்காளி பெட்டியை எடுத்தார். இதைத்தொடர்ந்து சரக்கு வேனை அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story