கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும்- நீதிபதிகள் உத்தரவு


கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும்- நீதிபதிகள் உத்தரவு
x

கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை


திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கல்பனா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் "என்னுடைய தந்தை கிராம உதவியாளராக இருந்தபோது கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து வாரிசு அடிப்படையில் எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என விண்ணப்பித்து இருந்தேன். எனது விண்ணப்பத்தை கடந்த 2020-ம் ஆணடு நிராகரித்து விட்டனர். எனவே எனக்கு வாரிசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, "திருமணம் முடிந்த மகளுக்கு அரசுப்பணி வழங்க இயலாது" என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், தமிழக அரசு 2020-ம் ஆண்டு வெளியிட்ட அரசாரணையின்படி, திருமணமான மகளுக்கு வாரிசு வேலை கோர உரிமை உள்ளது. மேலும், மனுதாரரின் தாயார் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அத்துடன், மனுதாரரின் கணவரும் இறந்து விட்டார். எனவே, அவருக்கு வாரிசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

விசாரணை முடிவில் நீதிபதிகள், "மனுதாரர் தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் தாயாரை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார். தற்போது மனுதாரரின் கணவரும் இறந்து விட்டார். இந்த குடும்பம் முழுவதும் மனுதாரரின் வருமானத்தை நம்பியே உள்ளது. எனவே, அவரது குடும்பச்சூழல் மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தகுதிக்கு ஏற்ற வகையில் கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை 3 மாதங்களுக்குள் அரசு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story