தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது 22 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது 22 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 22 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

தொழிலாளி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்திடும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் (வயது 24) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 12-ந் தேதி தொழிற்சாலையில் சுமார் 22 அடி உயரத்தில் வெல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரோகித் அங்கிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாவு

தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரோகித் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது 22 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story