மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி


மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 15 Sep 2023 9:30 PM GMT (Updated: 15 Sep 2023 9:31 PM GMT)

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி

கூடலூர்

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருவிலேயே குழந்தை இறந்தது

கோத்தகிரி தாலுகா குண்டாடா பிரிவு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மணி என்பவரது மகன் ஸ்ரீஜித் (வயது 27). தொழிலாளி. இவருக்கும், கூடலூரை சேர்ந்த விஜி (24) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் விஜி கர்ப்பம் அடைந்தார். ஆனால், போதிய வளர்ச்சி இல்லாததால் கருவிலேயே குழந்தை இறந்தது. கருக்கலைப்பு ஆனதால் மனமுடைந்த ஸ்ரீஜித், கடந்த 11-ந் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதை கண்ட விஜி சத்தம் போட்டு உள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஸ்ரீஜித்தை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ஸ்ரீஜித் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி

இதனால் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விஜி மனமுடைந்து காணப்பட்டார். இதைத்தொடர்ந்து கோத்தகிரியில் இருந்து கூடலூர் சின்ன பள்ளிவாசல் தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த விஜி, திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story