ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் இளம்பெண் பலி


ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் இளம்பெண் பலி
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:45 PM GMT)

கீழ்வேளூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதி கணவர் கண்முன்னே இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதி கணவர் கண்முன்னே இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

ஸ்கூட்டர் மீது கார் மோதியது

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிகாடு அருகே கீராலத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவி ரோஜா (வயது 26) மற்றும் குழந்தையுடன் நேற்று முன்தினம் கீழ்வேளூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு ஸ்கூட்டரில் திரும்பி சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை செல்வம் ஓட்டி செல்ல, குழந்தையுடன் ரோஜா பின்னால் அமர்ந்து இருந்தார்.

கீழ்வேளூர் அருகே வெண்மணி ஆர்ச் அருகே உள்ள வளைவில் சென்று கொண்டிருந்த போது, இவர்களுக்கு பின்னால் வந்த கீழ்வேளூர் ஒன்றியம் மோகனூர் ராமன் சேரி பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

இளம்பெண் பலி

இதில் ஸ்கூட்டரில் இருந்து ரோஜா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் ரோஜாவை மீட்டு தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரோஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் ரோஜா உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story