பட்டாபிராம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலி


பட்டாபிராம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலி
x

பட்டாபிராம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டு மண்ணொளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீசதீஷ் (வயது 22). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர், அம்பத்தூரை அடுத்த பாடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

அதே வேப்பம்பட்டு சர்வ சக்தி நகரைச் சேர்ந்தவர் துர்கா லட்சுமி (22). பி.காம் பட்டதாரியான இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கால் சென்டரில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீசதீஷ், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அருகே வரும்போது முன்னால் சென்ற வாகனங்கள் எதுவும் தெரியாத அளவுக்கு மழை பெய்து கொண்டிருந்தது. வேகமாக வந்த ஸ்ரீசதீஷ், அவர்களுக்கு முன்னால் ஆட்டோ செல்வதை அறிந்து, அதன் மீது மோதாமல் இருக்க திடீரென மோட்டார் சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்தினார்.

இதில் அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னால் அமர்ந்து வந்த துர்காலட்சுமி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தலையில் மோட்டார் சைக்கிள் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த துர்கா லட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஸ்ரீசதீஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான துர்கா லட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story