ரெயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் பலி


ரெயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் பலி
x
தினத்தந்தி 17 Feb 2024 6:00 PM GMT (Updated: 17 Feb 2024 6:00 PM GMT)

சொந்த ஊருக்கு செல்லும் அவசரத்தில் ரெயிலில் இருந்து கீழே இறங்கிய புதுப்பெண், தவறி கீழே விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நாகர்கோவில்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர் அருகில் உள்ள வல்லம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் சென்னையில் உள்ள மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஆரல்வாய்மொழி அழகியநகர் பகுதியைச் சேர்ந்த ஷீலா (வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு கணவருடன் வசித்து வந்த ஷீலா சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த 13-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். அந்த ரெயில் 14-ம் தேதி காலையில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக ரெயில் நிலையத்தில் நிற்காது. ஆனால் அந்த சமயத்தில் சிக்னல் கிடைக்காததால் ரெயில் நின்றது. இதனை கவனித்த ஷீலா ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் இறங்கினால் சீக்கிரம் வீட்டுக்கு சென்று விடலாம் என நினைத்து இறங்குவதற்கு ஆயத்தமானார். இந்தநிலையில் சிக்னல் கிடைத்து மீண்டும் ரெயில் புறப்பட்டது. உடனே அவசர, அவசரமாக ரெயிலில் இருந்து ஷீலா கீழே இறங்கினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ஷீலாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story