இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வாலிபரை ஓட ஓட விரட்டி இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல்


இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வாலிபரை ஓட ஓட விரட்டி இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல்
x

இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வாலிபரை ஓட ஓட விரட்டி இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

தகாத முறையில் நடந்த வாலிபர்

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம், அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 23). இவர், அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை 2 வருடத்துக்கு முன்பு காதலித்து வந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லோகநாதன், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கோபியுடன் (23) சேர்ந்து தனது முன்னாள் காதலியை அதே பகுதியில் உள்ள தேவாலயத்தின் பின்புறம் ரகசியமாக சந்தித்து பேசினார். அப்போது லோகநாதன், அந்த பெண்ணிடம் இருவரும் மீண்டும் காதலிக்கலாம் என்று கூறி தனது கையில் காதலியின் பெயரை பச்சை குத்தி இருப்பதை காட்டியதுடன், இளம்பெண்ணிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.

இருதரப்பினர் மோதல்

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது வீட்டுக்கு சென்று நடந்த விவரங்களை தனது அண்ணன் கார்த்திக்கிடம் கூறி அழுதார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன்னுடைய நண்பர்களான தணிகாசலம் (20), விக்கி என்ற விக்னேஷ் (20), சஞ்சய் (20) உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்டோருடன் அங்கு சென்று லோகநாதனிடம் தட்டிக்கேட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கையில் இரும்பு கம்பி, மூங்கில், செங்கல் உள்ளிட்டைவைகளால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

ஓட ஓட விரட்டி தாக்குதல்

ஒரு கட்டத்தில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் லோகநாதனை ஓட, ஓட விரட்டி உருட்டுகட்டை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். தடுக்க வந்த அவரது நண்பர் கோபிக்கும் அடி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த லோகநாதன் மற்றும் கோபி இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இருதரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story