முகவரி கேட்பதுபோல் நடித்து சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த வாலிபர் கைது


முகவரி கேட்பதுபோல் நடித்து சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 May 2023 4:35 AM GMT (Updated: 29 May 2023 5:27 AM GMT)

முகவரி கேட்பதுபோல் நடித்து சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சிறுமிகளிடம் சில்மிஷம்

சென்னை திருமங்கலம், முகப்பேர், நொளம்பூர், புழல், பெரவள்ளூர் பகுதிகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடும் வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச்செல்வதாக போலீசுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், திருமங்கலம், பெரவள்ளூர் போலீசில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சிறுமிகளிடம் வாலிபர் சில்மிஷம் செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. கேமராவில் பதிவான வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 31) என்பவரை பிடித்து விசாரித்தனர். டிரைவரான அவர், மேடை கச்சேரிகளில் பாட்டு பாடி வருவது தெரிந்தது.

போக்சோ சட்டத்தில் கைது

ஏற்கனவே 2021-ம் ஆண்டு சிறுமிகளிடம் சில்மிஷம் செய்ததாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாரால் சரவணன் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து விட்டதால் வாடகைக்கு மோட்டார்சைக்கிள் எடுத்துக்கொண்டு மீண்டும் சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சரவணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். முன்னதாக போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிய சரவணன், கீழே விழுந்ததில் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவரது கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story