ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பத்திருவிழா; நாளை தொடங்குகிறது


ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பத்திருவிழா; நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 11 July 2023 7:20 PM GMT (Updated: 12 July 2023 12:28 PM GMT)

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பத்திருவிழா நாளை தொடங்குகிறது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

தெப்பத்திருவிழா

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்பத்திருவிழா நாளை(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் நாளை மாலை 6.40 மணி முதல் இரவு 7.40 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. அதனை தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வருவார்.

விழாவின் 2-ம் நாளான 14-ந்தேதி அம்மன் கிளிவாகனத்திலும், 3-ம் நாள் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் சந்திரபிரபை வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6-ம் நாள் பல்லக்கிலும், 7-ம் நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடும், ரிஷபமூஷிகமயூர வாகனத்திலும், 8-ம் நாள் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகிறார்.

தெப்ப உற்சவம்

விழாவின் 9-ம் நாளான வருகிற 21-ந் தேதி காலை கோரதத்திலும், மாலை வெள்ளிமஞ்சத்திலும், 10-ம் நாள் பல்லக்கிலும் அம்மன் வீதியுலா வருகிறார். தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12-ம் நாளான 24-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள உள்தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்திலும் எழுந்தருளுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story