விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம்


விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 13-ந்தேதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த 21-ந்தேதி தேர் திருவிழாவும், நேற்று முன்தினம் ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு, திருமாங்கல்யதாரணம் என்ற ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

பின்னர், நூற்று கால் மண்டபத்தில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள வேத மந்திரங்கள் ஓத, திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசினம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story