சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!


சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
x
தினத்தந்தி 21 July 2023 5:47 AM GMT (Updated: 21 July 2023 5:54 AM GMT)

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி,

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான 31-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெற உள்ளது. அப்போது சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராகவும், பின்னர் இரவு 12 மணிக்கு அதே இடத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் ஆடித்தபசுக் காட்சி நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி மற்றும் மண்டகப்படித்தாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story