நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்


நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்
x

கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதில் கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை லாபகரமாக செயல்படுத்த இயலும் என்கிற இடங்களில் மட்டுமே திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகிகளின் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக நமது மாவட்டத்தில் அனைத்து சங்கங்களும் லாப நஷ்டம் பாராது ஏதாவது ஒரு பணியினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமென சங்க செயலாட்சியர் மற்றும் கள அலுவலர் மூலம் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சங்கங்கள் பெறும் நஷ்டத்தை சந்திக்க கூடிய நிலை ஏற்படும். எனவே இதனை கைவிட வேண்டும்.

மாநில அளவில் இதிலுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட போகும் கடும் நஷ்டத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் வருகிற 3-ந் தேதி இத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களையும் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு சங்கப் பணியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்த தொடர் விடுப்பு எடுக்க உள்ளோம். எனவே கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story