சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி விவசாயிகள் நூதன போராட்டம்


சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி விவசாயிகள் நூதன போராட்டம்
x

மோகனூர் அருகே சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

நாமக்கல்

மோகனூர்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூர் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்று அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே மனு கொடுக்கும் போராட்டம், மெழுவர்த்தி ஏந்தி போராட்டம், மனித சங்கிலி, நாமம் போட்டு போராட்டம், தீர்த்தக்குட போராட்டம், அக்னி சட்டி போராட்டம், புத்தகம் வாசிக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுவரை இது குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனு கட்டி போராட்டம்

இந்த நிலையில் மோகனூர் நாவலடியான் கோவிலில் உள்ள நாவல் மரத்தில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை துண்டு சீட்டில் எழுதிக்கட்டி வைத்து, இறைவனை வேண்டினால் கோரிக்கை நிறைவேறும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதையொட்டி மோகனூர் பகுதியில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி விவசாயிகள் கோவிலில் கோரிக்கை மனு எழுதி கட்டும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க. செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் ஒன்றிய செயலாளர் சிவகுமார், கிளை பொறுப்பாளர் சரவணன், தமிழக விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், விவசாயிகள், பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டு, சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோயவிலில் மனுக்களை எழுதி கட்டினர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு வெளியே, சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story